Wednesday, January 28, 2009

இன அழித்தலை மறைக்கும் பிரச்சாரம்

தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கும் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தி, அவரது ஆதரவு பாரம்பரிய ஆங்கில நாளிதழில் மட்டுமின்றி மேலும் சில தமிழ் ஏடுகளிலும் இன்று வெளிவந்துள்ளது.

தாங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத்தான் போர் நடத்தி வருகிறோம், அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக அல்ல என்றும், விடுதலைப் புலிகள்தான் அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள் என்று‌ம் சிறிலங்க அரசும், உண்மையை திட்டமிட்டு மறைக்கும் வல்லமை கொண்ட அதன் ஆதரவு ஊடகங்களும் தொடர்ந்து செய்துவரும் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்க்க இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பது மட்டுமின்றி, இப்படி ஒரு செய்தி (பிரச்சாரம்) மூலம் சிறிலங்க இராணுவம் ஈழத் தமிழ் மண்ணில் நிகழ்த்தி வரும் இனப் படுகொலையை மறைக்கவும், அதற்குக் காரணம் விடுதலைப் புலிகள்தான் என்று திசை திருப்பவும் முயன்றுள்ளனர்.

சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் குரலை, பேட்டி கண்டு எழுத்தாக ஒளி, ஒலி பரப்பி ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஒரு தொடர் பிரச்சாரத்தை செய்துவரும் அந்த பாரம்பரிய ஆங்கில நாளிதழின் இன்றைய தலைப்புச் செய்தியை படிக்கும் எவரும், தமிழக முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கும் நேற்று இரவு திடீரென்று இந்த அழைப்பை ராஜபக்ச விடுத்துள்ளார் என்றுதான் கருதுவார்கள். அப்படி ஒரு தலைப்பு. எப்பொழுது அவர் கூறினார் என்பதை மறைத்து செய்தி எழுதப்பட்டுள்ளது.

‘ஏசியன் டிரிபுயூனல்’ என்ற இணையத்தளத்திற்கு (இது அப்பட்டமான சிங்கள ஆதரவு இணைத்தளம் என்பதை அறிக) அதிபர் ராஜபக்ச அளித்துள்ள ஆங்கில பேட்டியில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

"I have already invited Tamil Nadu Chief Minister M.Karunanidhi to make an official visit to Sri Lanka and meet the Tamil people in Jaffna, as well as those in the East and in the Upcountry to see for himself how the Tamils in Sri Lanka are living with honor and dignity", Rajapaksa said hailing the DMK chief as a veteran Indian leader.

“யாழ்ப்பாணத்திலும், இலங்கையின் கிழக்குப் பகுதியிலும், மலையகப் பகுதியிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் எவ்வாறு கெளரவத்துடனும், கண்ணியத்துடனும் வாழ்கின்றனர் என்பதை நீங்களே அரசுப் பூர்வமாக இங்கு வருகை தந்து அவர்களைச் சந்தித்துத் தெரிந்துகொள்ளுங்கள் என்று நான் ஏற்கனவே தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்துள்ளனே” என்று ராஜபக்ச கூறினார் என்றுதான் அந்தப் பேட்டியில் கூறப்பட்டுள்ளது.

அதிபர் ராஜபக்ச, ‘ஏற்கனவே விடுத்த அழைப்பை’ ஏதோ புதிதாக விடுத்த அழைப்பு என்பதுபோல காட்டி ஒரு செய்தியை வெளியிட்டு அதன்மூலம் ஒரு பிரச்சாரத்தையும் செய்துள்ளார்கள்.

அந்த ‘புகழ்பெற்ற இணையத் தளத்திற்கு’ அளித்த பேட்டியை, ஒரு ‘அறிக்கை’ (A report posted in the Preisdents secretariat website) என்று பெரிதுபடுத்தி, சிறிலங்க அரசுடன் இணைந்து, ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை செய்துள்ளார்கள் இந்த உண்மையின் காவலர்கள்.

இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம்? ‘அப்பாவித் தமிழர்களை விடுதலைப் புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள்’ என்று அடிப்படையற்ற ஒரு சொத்தை வாதத்தை தமிழ்நாட்டு தமிழர்கள் எண்ணங்களில் ஆழ‌ப் பதிய வைக்க தங்களது செய்திகளையே பிரச்சாரமாக்கியுள்ளார்கள்.

இலங்கையில் கடும் போர் நடக்கும் முல்லைத் தீவுப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை பாதுகாப்பு வளையம் என்று கூறி, அவர்கள் தங்கியிருந்த பகுதி‌யி‌ன் ‌மீது‌ம், தற்காலிக மருத்துவமனையையும் குறிவைத்து தொடர்ந்து குண்டு வீசித் தாக்கி, 400க்கும் மேற்பட்டோரை அழித்ததை மறைக்க இந்த கேடய வாதத்தை செய்திகளாக வீசியுள்ளார்கள்.தமிழக முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கைக்கு வந்து, போர் நடக்கும் இடங்களில் நாடோடிகள் போல பிள்ளை, குழந்தைகளை தூக்கிக் கொண்டு காடுகளில் பதுங்கி வாழும் மக்களிடம் உண்மை என்ன என்பதை அவர்களை நேரில் சந்தித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அதிபர் ராஜபக்சயின் விருப்பமாக இருந்தால், அதனை அதிகாரப்பூர்வமான வழிகளில் செய்திருக்கலாமே? அப்படிப்பட்ட அழைப்பை பேட்டியின் வாயிலாக, அதுவும் இப்படிபட்ட உலகப் பிரசித்துப் பெற்ற இணையத் தளத்திற்கு அளிக்கும் பேட்டியின் வாயிலாகவா அழைப்பை விடுப்பார்கள்?

ஒரு வாரத்திற்கு முன்னர் அயலுறவுச் செயலர் சி‌வ் சங்கர் மேனன் அங்கு சென்றாரே? கண்டிக்குச் சென்று ராஜபக்சயை சந்தித்தாரே. அப்பொழுது அவரிடம் இந்த அழைப்பை விடுத்திருந்தால், தமிழக சட்டப் பேரவையில் ‘அய்யகோ’ என்று தீர்மானம் போடாமல் தவிர்த்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை.

ஆனால் ராஜபக்சயின் பேட்டியை வெளியிட்ட இணையத்தளம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது:

In a smart diplomatic initiative, President Mahinda Rajapaksa Sunday invited 'veteran' Indian leader Karunanidhi, also his arch rival Jayalalithaa Jayaram of AIADMK to visit Jaffna and Vanni and personally appeal to LTTE to release the Tamilians held as human shield at gun point.

‘மிக அறிவார்ந்த ராஜதந்திர நடவடிக்கையாக’ (In a smart Diplomatic initiative) என்று கூறித்தான் பேட்டியைப் பற்றிய விவரிப்பை ஆரம்பிக்கின்றார் அதன் இதழியலாளர்.

முதலமைச்சர் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் அழைப்பு விடுத்துள்ளது ‘போல’ ஒரு உருவகத்தை ஏற்படுத்தும் முயற்சி என்பது இந்த வார்த்தைகளே புலப்படுத்தவில்லையா? பத்திரிக்கையை படிப்பவர்கள் அந்த இணையத்திற்குச் சென்று படிக்கவா போகிறார்கள் என்ற அறிவார்ந்த நம்பிக்கையுடன் செய்யப்பட்டுள்ள செய்திப் பிரச்சாரம் இது.

இன்று நேற்றல்ல, கடந்த அக்டோபர் மாதம் முதல் போரை நிறுத்தக் கோரி தமிழ்நாட்டில் எழுந்த குரலோடு, எழுந்து ஒரு முக்கிய கோரிக்கை, அங்கு (ஈழத்தில்) என்னதான் நடக்கிறது என்பதை அறிய அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்பதே. அவர்கள் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை சந்திக்கட்டும், உண்மையை அறியட்டும் என்றுதான் தமிழகத் தலைவர்கள் கோரி வருகிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ், இலங்கை செல்லும் அயலுறவு செயலருடன் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று குரல் கொடுத்தாரே? மத்திய அரசு அதற்கெல்லாம் செவி சாய்க்கவில்லையே?

உண்மையறிய தமிழ்நாடு தயாராகவே உள்ளது. ஆனால் சிங்கள இனவாத அரசு தயாராக இல்லை. அதனால்தான் இப்படிப்பட்ட ‘எளிமையான’ பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது.

குழந்தைகளும், பள்ளிச் சிறார்களும் நாளைய புலிகள் என்ற பார்வையே சிறிலங்க அரசிற்கும், அதன் முப்படையினருக்கும் உள்ளது என்பதை அறியாமல் இங்கு யாரும் ஈழப் பிரச்சனையை பேசிக்கொண்டிருக்கவில்லை என்பதை சிங்கள சிறிலங்க அரசும், அதன் துதிபாடிகளும் உணர வேண்டும்.

கிழக்கில் உள்ள தமிழர்கள், மேற்கில் உள்ள தமிழர்கள், தெற்கில் வாழும் தமிழர்கள், சிறிலங்க இராணுவத்தின் கொலை வெறித் தாண்டவத்திற்கு பயந்து நாட்டை விட்டு கடல் கடந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த தமிழர்கள் என்று எல்லோருடனு‌ம் பேசி அறிந்துதான் இங்கு அரசியல் நடைபெறுகிறது, அவர்களின் இன விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவு பெருகுகிறது.

சிறிலங்க அரசின் இன வெறி நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி கட்டுரை தீட்டிய சிங்கள இன பத்திரிக்கையாளர்களைக் கொன்று குவிக்கும், கடத்திக் காணடிக்கும் ராஜபக்ச சகோதரர்களின் இன வெறியாட்டத்தைக் கண்டு கொள்ளாமல், அதற்கு எதிர்ப்பு காட்டாமல், அந்த ஆட்சி கொடுக்கும் விருதை பெற்றுக்கொண்டு புளங்காகிதம் அடையும் ‘பத்திரிக்கை தருமிகள்’ நடத்தும் இப்படிப்பட்ட திட்டமிட்ட பிரச்சாரம் தமிழனத்தை திசை திருப்பும் என்று எதிர்பார்ப்பது அறியாமையே.

நன்றி; http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0901/27/1090127089_2.htm

No comments: